சென்னை பசுமை வழிச்சாலையில் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மாணவர்களுக்கு இங்குக் கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப்படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவர்கள் தங்களை முதன்மைத் தேர்வுக்குத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுதவிர, முதன்மைத்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
தமிழக மாணவர்கள் எங்குப் பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 225 பேர் தங்கிப் பயிலச் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இம்மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் ஜூன் 27 மாலை 6 மணிவரை தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் 28.06.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை 06.00 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, 29.06.2022 மற்றும் 30.06.2022 ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு 01.07.2022 முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.
இணையத்தில் பதிவு மேற்கொள்ளும் மாணவர்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழினைக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேரும் போது ஒப்படைக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத் தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment