Breaking

Saturday, 5 June 2021

நீட் தேர்வால் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பா? அரசுக்கு பரிந்துரை செய்ய நீதிபதி தலைமையில் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு சமுதாயத்தின் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா? என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதனை கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமென்றும், கலைஞர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, 12வது வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி, இதற்கான பல சட்டப் போராட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. 

சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்று கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு. இந்த கடமையை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில், நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது.

இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா?, என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், கல்வியாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment